Tamilnadu

ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கு: ஆளுநரின் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் சம்மன்!

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக 33 பேரிடம், 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் திவாரி, ராஜேந்திர பாலாஜி மீதான குற்றப்பத்திரிகை நவம்பர் மாதமே தயாராகிவிட்டதாக கூறினார். ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி ஆளுநருக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி கோப்புகள் அனுப்பபட்டதாகவும், ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரிய விவகாரத்தில் முடிவு எடுக்க தாமதம் ஏன்? என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Also Read: மாணவர்களை கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கினால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை !