Tamilnadu

“புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்” - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தல்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் இன்று (26.2.2025) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கூட்ட அரங்கில் வாரியத்தால் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுக்கட்டுமான திட்டப்பகுதிகளின் பணி முன்னேற்றம் குறித்து சென்னை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது, “ முதல்வர் அவர்கள் கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ரூ.1148.85 கோடி மதிப்பீட்டில் 17 திட்டப் பகுதிகளில் 6,424 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவித்தார். அதில் ராயபுரம், பெரம்பூர், ராதாகிருஷ்ணன் நகர், துறைமுகம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுக்கட்டுமான திட்டப் பகுதிகளின் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு ரூ.24,000/- கருணைத் தொகையினை உடனடியாக வழங்கி வீடுகளை காலி செய்ய வேண்டும்.

இப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னின்று செய்து முடிக்க வேண்டும். வரும் நிதியாண்டில் உங்கள் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுக்கட்டுமான திட்டப்பகுதிகளை தெரிவித்தால், அவற்றை முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என தெரிவித்துக்  கொள்கிறேன்.

குடியிருப்புகள் காலி செய்யப்பட்ட பின் வாரிய அதிகாரிகள் அவற்றை இடித்து, புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் தொடங்க வேண்டும். புதிய இடங்களில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு அரசு துறையின் அனுமதிகளை விரைந்து பெற்று பணிகளை தொடங்கிட வேண்டும். அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40,792 குடியிருப்புகளில் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

வாரியத்தால் வழங்கப்பட்ட மனைகளுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதற்காக கடந்த 24 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆத் தேதி வரை சிறப்பு முகாம்கள் தொகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முகாம்களில் கலந்துக் கொண்டு வாரிய குடியிருப்புதார்களுக்கு போதிய விழிப்புணர்வு அளித்து விற்பனை பத்திரங்களை பெற ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், த.வேலு, இ.பரந்தாமன், ஜெ.கருணாநிதி, மருத்துவர் நா.எழிலன், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஆ.வெற்றிஅழகன், ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கே.பி.சங்கர், ஜே.எம்.எச் ஹசன்மௌலானா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., வாரிய இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., வாரிய செயலாளர் நா.காளிதாஸ், தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி,  சு.லால் பகதூர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Also Read: ஆன்லைன் விளையாட்டு :தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் !