Tamilnadu

விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் : காரை நிறுத்தி முதலுதவி அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி !

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சுமார் ரூ. 8 கோடி மதிப்பில் கோபாலபுரத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’ கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் தயார்நிலையில் உள்ள பணிகள் மற்றும் ஏற்பாடுகளை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வை முடித்து துணை முதலமைச்சர் ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்றும் ஆட்டோவும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த துணை முதலமைச்சர் உடனே, தனது காரில் இருந்து இறங்கி, ஆட்டோ ஓட்டுநருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்துள்ளார். பிறகு உடனே அவரை அருகே இருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.

விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அங்கிருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Also Read: தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்தாலும் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சொல்வது என்ன?