Tamilnadu
“அப்பா” செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : இச்செயலியின் 5 முக்கிய பயன்கள் என்ன?
அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்றையதினம் கடலூர் மாவட்டத்திற்கு வருகைத்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் 1476.22 கோடி ரூபாய் செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்றையதினம் கடலூர் மாவட்டம், திருப்பயரில், நடைபெறும் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் உரையாடி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம், திருப்பயரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில், தமிழ்நாட்டின் 132 அரசுப் பள்ளிகளில் 177.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், உண்டு உறைவிடப்பள்ளி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் – ஆசிரியர் கழக காட்சிக் கூடத்தையும் திறந்து வைத்தார். மேலும், 234/77 (ஒருமைக்கண்) செயலி மற்றும் தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் “அப்பா” எனும் செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்து, தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாட்டுச் சிறப்பு மலரை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம்
பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல நெருங்கிய நட்புறவை ஏற்படுத்துவதற்கு தமிழகத்தில் 1964-ஆம் ஆண்டு 22 பள்ளிகளுடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம், தற்போது 50,000 பள்ளிகளுக்கு மேல் கொண்ட மாபெரும் அமைப்பாக அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் செயல்பட்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் சிறப்பாக செயல்படும் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல், தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பொதுத்தேர்வு எழுதும்
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 புத்தகமும், 12-ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கு 8 புத்தகமும், என மொத்தம் 11 புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாவட்ட விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்தல், 2023-24ஆம் ஆண்டு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த 1749 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 43 மாணவர்களையும் பாராட்டி மாநில அளவில் விழா எடுத்து அவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயம் வழங்கியது, அரசால் மாணவர்களுக்காகக் கொண்டுவரப்படும் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பள்ளிகளில் முறையாகப் பயன்படுத்தப்பட்டு மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை அந்தந்தப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் உறுதி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்”
பள்ளி மாணவர்கள் நலனை மேம்படுத்திடவும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நல்லுறவை உண்டாக்குவதற்கும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சீரிய முயற்சியில் மண்டல வாரியாக “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
“பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” நிகழ்ச்சி, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக 7 மண்டலங்களில் நடத்திடத் திட்டமிடப்பட்டு, மதுரை, திருச்சி, தருமபுரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சுமார் 1.95 இலட்சம் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன் முத்தாய்ப்பாக, 7-வது மண்டல மாநாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்றையதினம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், மாணவர்களுக்கு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அனைத்து திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் ஆகிய விவரங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, இதில் கலந்துகொண்ட பெற்றோர்கள் மூலமாக அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் உள்ளத்தில் நேர்மறை எண்ணங்கள் தோன்றி சாதனைகள் புரிவதற்கான விழிப்புணர்வும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வது சார்ந்தும், குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வும், பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மூலமாகவும், மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட சிறப்புப் பேச்சாளர்கள் மூலமாகவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்துள்ளது.
கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை கட்டடங்களை திறந்து வைத்தல்
நபார்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில், 132 அரசுப் பள்ளிகளில் 172.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 714 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 22 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 4.83 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி கட்டடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய கொடையாளர்களை கௌரவித்தல்
அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான எண்ணற்ற உபகரணங்களை நன்கொடையாகத் அளித்து வருகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய கொடையாளர்களை சிறப்பிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.
234/77 (ஒருமைக்கண்) செயலியை வெளியிடுதல்
“ஒருமைக்கண்” செயலி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 77 பொருண்மைகள் குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 234/77 திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளை ஆய்வு செய்தமைக்கான தகவல்கள் மற்றும் அறிக்கைகளை கொண்ட மின்புத்தகம் (E-Book) ஆகும்.
இச்செயலியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய முழு விவரங்கள், “ஒருமைக்கண்” திருக்குறள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் விளக்கம் இந்த செயலியின் மின் புத்தகத்தின் தொடக்கத்தில் இடம்பெறுகிறது. இத்தகைய செயலி முதல் முறையாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, அரசுப் பள்ளி ஆய்வுகளுக்கான விரைவான அணுகுமுறைக்கு வித்திடுகிறது. இச்செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
“தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் - அப்பா” எனும் செயலியை வெளியிடுதல்
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி சமீபத்திய தளம் மற்றும் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இச்செயலி பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றாட தகவல் பகிர்வு மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான அரசு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது. அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அனைத்து உத்தரவுகளையும் இதில் காணலாம். சுமார் 46,000 அரசுப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியங்களை சார்ந்த சுமார் 12,000 தனியார் பள்ளிகள் இந்த தளத்தின் மூலம் பயனடைவர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!