Tamilnadu

அரசுப் பள்ளிகளில் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள்... பள்ளிக்கல்வித்துறை புதிய சாதனை!

தற்போதுள்ள காலத்தில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டதால், தமிழ்நாடு அரசும் நவீனத்தை நோக்கி நகர்கிறது. தனியார் பள்ளிகளை போலவே அரசுப் பள்ளிகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு ஜூன்,06-ம் தேதி ஸ்மார்ட் போர்டு அமைக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் அறிவை மேலும் பெருக்கி கொள்ள முடிகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.

அதாவது இந்த திட்டத்தின் மூலம் 22,931 அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டை கொண்டு சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இன்று கடைசி ஸ்மார்ட் போர்டை இன்று (ஜன.27) சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு :

“அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியை வகுப்பறைக்குள்ளும் கொண்டு செல்லும் முயற்சியாக, நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியை 14.06.2024 அன்று முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று 22,931ஆவது திறன்மிகு வகுப்பறையினை சென்னை ஒக்கியம் துறைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறுவி மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் வகையில், ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல்

அரசுப் பள்ளிகளில் அறிவியல் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Also Read: "பிரபாகரன் குறித்து சீமான் சொல்வது அனைத்துமே தவறான தகவல்"- அம்பலப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் !