Tamilnadu

விற்பனைக் கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் : ரூ.1 கோடிக்கு விற்பனை!

சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனை கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 27.12.2024 அன்று துவக்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்ட்ரா, குஜராத், பீகார், மேற்கு வங்காளம், பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் 120 அரங்குகளில் விற்பனை செய்யப்பட்டன.

இக்கண்காட்சியில் குஜராத் மாநிலத்தின் கைத்தறி ஆடைகள், மகாராஷ்ட்ரா மாநில கோண்ட் பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள், மேற்கு வங்காளத்தின் செயற்கை பூ கைவினைப் பொருட்கள், பாண்டிச்சேரி மாநிலத்தின் மூலிகைப் பொருட்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கடலூர் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள், நாமக்கல் கொல்லிமலை அரபுளி காபித்தூள், கரூர் கைத்தறி துண்டுகள், சிவகங்கை பாரம்பரிய அரிசி வகைகள், திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன், சிறுதானியங்கள், தூத்துக்குடி பனை பொருட்கள், பனை வெல்லம் (கருப்பட்டி), விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், அலங்கார விளக்கு திரைகள், விருதுநகர் செட்டிநாடு புடவைகள், அரியலூர் முந்திரி பருப்பு, கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், மற்றும் திருநெல்வேலி அல்வா போன்ற பொருட்களும் விற்பனைக செய்யப்பட்டன.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மக்களின் பேராதரவுடன் 27.12.2024 முதல் 09.01.2025 வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

Also Read: ”தமிழ்நாட்டை மீண்டும் பழிவாங்கும் மோடி அரசு” : செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்!