Tamilnadu

தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ - யார் இந்த கர்நாடகாவை சேர்ந்த தேவநூர மஹாதேவா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 30.03.2023 அன்று சட்டமன்றப் பேரவையில், எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-இன்கீழ் அறிவித்தார்.

தேவநூர மஹாதேவா

அந்த அறிவிப்பிற்கிணங்க, 2024-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவா அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவா அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12/12/2024) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

Also Read: ‘முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்’ - 180 பேர் பயன்! : அமைச்சர் கோவி. செழியன் பேச்சு!