Tamilnadu
Bike Taxi விவகாரம் : “தமிழ்நாடு அரசு மட்டுமே முடிவு செய்ய முடியாது” - அமைச்சர் சிவசங்கர் விளக்கம் !
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்கி, அரசுப் பணிமனைகளை கணினிமயமாக்கும் செயல்பாட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, "பைக் டாக்சி குறித்து தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்க முடியாது. ஒன்றிய அரசுடன் இணைந்துதான் முடிவெடுக்க முடியும். ஒன்றிய அரசு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே அது இந்தியா முழுவதற்கும் பொருந்தும்.
ஆனாலும் நீதிமன்றங்களில் பைக் டாக்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவித கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பில் உயர் அலுவலர்கள் மூலம் குழு அமைத்து பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சியில் பயணிப்போரின் பாதுகாப்பு முக்கியம். எனவேதான் பைக் டாக்சியை முழுமையாக தணிக்கை செய்ய சொல்லியுள்ளோம்.
வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணிப்பது, சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சிறு விபத்து ஏற்பட்டாலும் நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பைக் டாக்சிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்து வருகிறோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பைக் டாக்சியை எதிர்க்கின்றனர்.
பைக் டாக்சி மூலம் லட்சக்கணக்கானோர் வேலை பெறுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் அதை தங்கள் தொழிலுக்கு ஆபத்தாக உணர்கின்றனர். ஒன்றிய அரசின் நடைமுறையையும், நீதிமன்ற உத்தரவையும் பின்பற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. எனவே ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. பைக் டாக்சியில் பயணிப்போர் விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் பெறுவதில் வித்தியாசம் உள்ளது. ஒன்றிய அரசு அது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
வாகனக் காப்பீடு உள்ளிட்ட விதிகளை முறையாக பின்பற்றாத பைக் டாக்சிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். வாகனத்தை பறிமுதல் செய்யும் நிலைக்கு தற்போது செல்லவில்லை. அபராதம் மட்டுமே விதிக்கிறோம். அனைத்து துறையிலும் காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் நடக்கின்றன. எனவே அதற்கேற்ப விதிகளை மாற்றும் தேவை இருக்கிறது.
பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்பதால் போக்குவரத்துத்துறை இழப்புகளை சந்தித்து வரும் நிலையிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தமிழகத்தில் ஒரு கி.மீ க்கு 52 காசுகள்தான் பேருந்துப் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அருகில் உள்ள மாநிலங்களில் ஒரு கி.மீ.க்கு 1.10 காசு வரை கட்டண வசூலிக்கப்படுகிறது.
போக்குவரத்துத்துறை ஒரு சேவைத்துறை. எனவே நட்டம் வருவது இயற்கை. ஆனால் அரசு அதை ஈடுசெய்து வருகிறது. பேருந்து போக்குவரத்தால்தான் தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி இருக்கிறது. மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டமான விடியல் பயணத் திட்டத்திற்கான தொகை போக்குவரத்து துறைக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
எனவே போக்குவரத்து துறை சிரமமின்றி செயல்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஒன்றாம் தேதியே சம்பளம் கொடுக்க விடியல் பயணத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத் துறைக்கு வழங்குவதே காரணம். பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததே போக்குவரத்து துறை இழப்புக்கு முக்கியக் காரணம்." என்றார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!