Tamilnadu

தொலைக்காட்சியில் கோரிக்கை... உடனடி நடவடிக்கை எடுத்த அரசு : பள்ளி மாணவி தொடங்கி வைத்த புதிய பேருந்து சேவை!

திண்டிவனம் அருகிலுள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற 8-ம் வகுப்பு மாணவி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "அம்மணம்பாக்கத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருப்பதால், மேல் படிப்பதற்கு 5 கி.மீ பயணித்து அனந்தமங்கலம் பகுதியில் இருக்கிற பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பஸ் வசதிகள் இல்லாததால் தினமும் 5 கீ.மி நடந்து சென்று வீடு திரும்பவேண்டியுள்ளது" என்று கூறினார்.

இந்த நிகழ்வு முதலமைச்சரின் கவனத்துக்கு வந்த நிலையில், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது அந்த வழி தடத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அந்த பேருந்து சேவையை இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி தர்ஷினியே கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இது குறித்து அமைச்சர் சிவசங்கர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "சமீபத்தில் இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷினி என்ற மாணவி, பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டு 5 கி.மீ தூரம் நடந்து செல்வதை சொன்னதை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், அம்மணம்பாக்கம் கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வரை வழித்தடத்தில் பேருந்து சேவையினை, பள்ளி மாணவி தர்ஷினி கொடி அசைத்து துவக்கி வைத்தார்" என்று கூறியுள்ளார்.

Also Read: ஃபெஞ்சல் புயல் : பாதிக்கப்பட்ட இடங்களுக்கு திமுக சார்பில் 150 டன் நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு !