Tamilnadu

திருவண்ணாமலை நிலச்சரிவு : உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் மற்றும் ஆறுதல்!

ஃபெங்சல் புயல் சீற்றம் மற்றும் தொடர்ச்சியான அதிகனமழை காரணமாக திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

இதற்கான மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு முழுமூச்சாக ஈடுபட்டு வரும் நிலையிலும், எதிர்பாராத விதமாக 7 பேர் பாறை உருண்டோடி வழுந்ததன் விளைவாக உயிரிழக்க நேரிட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது 01-12-2024 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் கனமழையின் காரணமாக மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது.

இதனையறிந்து மாவட்ட நிர்வாகத்தினரால் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படையின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் நேற்று இரவு முதல் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று 02-12-2024 மாலை 6.30 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் துரதிஷ்டவசமாக அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா (வயது 27), மகன் கௌதம் (வயது-9), மகள் இனியா (வயது-5), பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (வயது-7) மஞ்சுநாதன் என்பவரின் மகள் விநோதினி (வயது-14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா (வயது-7) ஆகிய ஏழு நபர்கள் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “4 மணிநேரத்திற்குள் தற்காலிக தரைப்பாலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!