Tamilnadu

ஃபெஞ்சல் புயல் : தடையின்றி பால் விநியோகம் செய்த ஆவின் நிர்வாகம்... 15 இலட்சம் லிட்டர் பால் விற்பனை !

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலினால் நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் பொதுபோக்குவரத்துக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே கனமழை பெய்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் இன்றி, ஆவின் நிறுவனம் சார்பில் 100 % பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100% விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் , 25,000 பாக்கெட் UHT பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர் மற்றும் UHT பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது.மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ஃபெஞ்சல் புயல் : தமிழ்நாடு அரசின் தீவிர செயல்பாட்டால் ஒரே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை !