Tamilnadu
ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கம் : தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவு !
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். அதோடு மட்டுமின்றி உள்நாட்டு தொழிலதிபர்களுடனும் தொடர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில். 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூரில் ரூ. 3051 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை மேலும் ரூ. 3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்கனவே ஆலை செயல்பட்டு வரும் நிலையில் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
அதே போல இந்த தொழிற்சாலையில் தினசரி 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தினசரி 2 லட்சம் மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 'ஆப்பிள் ஐபோன்' உற்பத்தி செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!