Tamilnadu
பெண்கள் குறித்து ஆபாச கருத்து : வழக்கை சந்திக்குமாறு பாஜக பிரமுகர் H ராஜாவுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் !
தமிழ்நாடு பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் பிரமுகருமான எச்.ராஜா, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டார். இந்த கருத்தானது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பிய நிலையில், காவல் நிலையத்தில் பலரும் புகார் அளித்தனர்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தனர். அதன்பேரில் பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது, பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது ஈரோடு டவுன் காவல்துறை.
இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தபோது, ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கானது, சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் மனுவும் அளிக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, அந்த சர்ச்சை பதிவை எச்.ராஜாதான் பதிவிட்டாரா? என்று எச்.ராஜா தரப்புக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பிய நிலையில், அதற்கு 'ஆம்' என பதிலளிக்கபட்டது. இதையடுத்து எச்.ராஜாவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் விசாரணையை சந்திக்குமாறும் அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Also Read
-
தமிழ்நாடு முழுவதும் ரூ.655 கோடியில் 19 புதிய திட்டப் பணிகள் : அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
இந்தியாவிலேயே முதன் முறை : சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த Super Tree Tower!
-
இந்தி திணிப்பு : “நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்...” - பட்டியலிட்டு முதலமைச்சர் கண்டனம்!
-
கர்தவ்ய த்வார்.. மீண்டும் மீண்டும் இந்தி.. எத்தனை முறை அடித்தாலும் திருந்தாத பாஜக - கொந்தளித்த தலைவர்கள்!
-
ஊடகங்களையும் விட்டுவைக்காத த.வெ.க... கண்டுகொள்ளாத விஜய்.. கொந்தளித்த பத்திரிகையாளர் அமைப்புகள்!