Tamilnadu

கைவிரித்த ஒன்றிய அரசு... கரம் கொடுத்த முதலமைச்சர்... யார் இந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை ?

மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகே உள்ள பில்லுசேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்துப்போகவே, தற்போது இவர் அவரது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். விவசாய கூலித் தொழிலாளியான இவர், பெண்கள் சுய உதவிக்குழுவில் இணைவதற்காக பாடுபட்டார்.

ஆரம்பத்தில் நில உரிமையாளர்களைச் சந்தித்து, மொத்தமாக சுமார் 10-15 ஏக்கர் விவசாய விளை நிலங்களில் விவசாய வேலையைக் குத்தகைக்கு எடுத்து, அதற்கு கூலியாட்களை திரட்டி, நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகள் செய்து, அதில் வரும் மொத்தக்கூலியை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்கினார்.

முதியவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் தனது அணியில் சேர்த்து அவர்களுக்கும் வேளாண் வேலை வழங்கி கூலி வாங்கிக் கொடுத்தார். இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக பாடுபட்டார். வறுமை, கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட சில அவலங்களில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகி வெளியே வர காரணமாக அமைந்தவர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.

இது மட்டுமின்றி சமூக சேவையும் செய்து வந்த இவர், 2004-ம் ஆண்டு தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமி பேரிடரில் மக்களுக்கு இவரும், இவரது மகளிர் குழுவும் சேவைகளை செய்து பாராட்டுகளை பெற்றது. இவரது பல்வேறு சேவைகளை பாராட்டி, 1999-ம் ஆண்டு ‘மாதா ஜீஜாபாய் - ஸ்த்ரீ சக்தி புரஷ்கார்’ விருது அறிவிக்கப்பட்டு 2000-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழங்கி, அவருடைய பாதம் பணிந்தார். அன்றே பில்லுச்சேரி சின்னப்பிள்ளையின் பெயர் இந்தியா முழுவதும் உச்சரிக்கப்பட்டது. அதன்பிறகு இவருக்கு தமிழ்நாடு அரசு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ”பொற்கிழி விருதும்”, தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்காக ”ஜானகிதேவி” விருதையும் வழங்கி கௌரவித்து.

இதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு சமூக சேவைக்காக தூர்தர்ஷன் பொதிகை விருதையும் பெற்ற இவருக்கு, 2018-ம் ஆண்டு ஒளவையார் விருதும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி ஒன்றிய அரசு கௌரவித்தது. இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்ற சிலர், இவருக்கு பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், வீடு சொந்த வீட்டுக்காக காத்திருந்து சோர்வடைந்தார். இதனால் நேற்று இவர் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “நான் பாட்டுக்கு வீட்டுல இருந்தேன். திடீரென்று நாலு பேர் வந்து சால்வை போர்த்தினாங்க. மோடியோட ‘அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்’ இருக்கு. அதுல வீடு கட்டி தர்றோம்னு சொன்னாங்க. பட்டா கொடுத்தாங்க. ஆனா ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இதுவரை வீடு கட்டித் தரலை. என்னாலையும் எதுவும் செய்ய முடியல” என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இந்த நிலையில், சின்னப்பிள்ளைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு வீடு கட்டும் பணிகள் இந்த மாதமே தொடங்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது தற்போது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also Read: பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு வீடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!