Tamilnadu

“இந்தியாவுக்கே ஒளிகாட்டும் திறன்வாய்ந்த அரிய பட்ஜெட் இது...” - தமிழ்நாடு அரசுக்கு கி.வீரமணி பாராட்டு !

தமிழ்நாடு 2024 - 2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை பின்வருமாறு:

‘திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின், சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது -இடைக்கால பட்ஜெட் உள்பட (நான்காவது - முழுமையான பட்ஜெட்) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் (165 பக்க உரை) இன்று (19-2-2024) சட்டப்பேரவையில் - ஒன்றிய அரசின் நிதி தரவேண்டிய பங்களிப்பைக் கூட சரியாகத் தராமல், பொருளாதாரக் கொள்கை நெருக் கடியை வைத்துள்ள நிலையிலும், நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும், பல்வேறு புதிய திட்டங்களுக்காக ஏராள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி, வேலை வாய்ப்பு, பண வீக்கக் கட்டுப்பாடு எல்லாவற்றிலும் தமிழ்நாடு அரசின் தனித்த சாதனை சரித்திரத்தை மிக அருமையாக தயாரிக்கப்பட்டு, புதிய சாதனை சரித்திரத்தை இந்தியாவிற்கே ஒரு புதிய ஒளிகாட்டும் வகையில் ஏழு வண்ணங்கள் ஒளியும், ஏழிசையும் கேட்க முடிகின்றது.

முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும், நிதித் துறை செயலாளருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்! வியப்பின் விளிம்பில் அனைவரையும் தள்ளும் வித்தகு திறன்வாய்ந்த அரிய பட்ஜெட் இது!

Also Read: “தடைகளை தாண்டி, வளர்ச்சியை நோக்கி...” - தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு வைகோ பாராட்டு !