Tamilnadu
”பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரீகமாக பேசியதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பத்திரிக்கையாளர் கார்த்திகை செல்வன், செய்தியாளராக பல நிலைகளில் பணியாற்றி தற்போது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். பல்வேறு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சிகளையும், நேர்காணல்களையும் நெறியாள்கை செய்வதில் தனக்கென்று தனிப்பாணியை உருவாக்கி நற்பெயர் எடுத்தவர். அவரை நோக்கி முற்றிலும் அநாகரீகமாக, தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதற்கான அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது?. அவர் சார்ந்துள்ள பாஜக, ஒன்றிய அரசாக உள்ளது என்பது தரமற்று பேசுவதற்கான உரிமத்தை வழங்குகிறதா?
இந்த அநாகரீக நடத்தையை பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டித்துள்ள பிறகும், அண்ணாமலை தனது பேச்சை நியாயப்படுத்தியுள்ளார். கொங்கு பகுதி மக்களையும், கிராமப்புற மக்களையும் அதற்கு ஆதரவாக குறிப்பிட்டு அவமதித்துள்ளார்.
பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர், இதுபோல அநாகரீகமாக பேசுவதும், ஊடகங்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதும் இது முதல்முறை அல்ல. ஊடக நிருபர்கள் குரங்கு போல் தாவுகிறார்கள் என்றார்; தனது ரபேல் கைக்கடிகாரத்திற்கு கணக்குக்காட்ட முடியாத போது புதிய தலைமுறை நிருபரை நோக்கி அநாகரீகமாக கூச்சலிட்டார்; ஊடக நிருபர்களை நோக்கி பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என செய்தியாளர் சந்திப்பிலேயே பேசி அவமதித்தார். இதுபோல வேண்டுமென்றே தொடர்ந்து கண்ணியமற்று பேசிவரும் அண்ணாமலை இப்போது அநாகரீகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார். மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், கண்ணியம் தவறக் கூடாது என்பது அரசியல் நியதி. பாஜகவும், அதன் தலைவரும் இந்த நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக தங்களைக் கருதிக்கொள்கின்றனர்.
அண்ணாமலையின் இந்தப் போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், பொது வெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
-
14 ஆண்டுகால துயரம் : சிறுமிக்கு வாழ்க்கை கொடுத்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை - முதலமைச்சர் பாராட்டு!
-
சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்கும் ஒன்றிய பாஜக அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?” : அதிமுக ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முதலமைச்சர்!