Tamilnadu

"20 ஆண்டுகள் கழித்து மோடியால்தான் இந்தியாவுக்கு கொரோனா வரவில்லை என்பார்கள்" - அமைச்சர் உதயநிதி கிண்டல் !

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 47வது புத்தக கண்காட்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் எழுதிய "கொரோனா - உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்" என்கின்ற புத்த்கத்தின் தமிழ் மற்றும் ஆங்கில பதிவு வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட அதனை பத்திரிகையாளர் இந்து என்.ராம் மற்றும் டாக்டர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "யாரும் என்னைப் பற்றி ஒரு விஷயம் கூறவில்லை நானும் ஒரு பதிப்பாளர். இளைஞரணி சார்பில் கலைஞரின் பல்வேறு புத்தகங்களை எழுதி பதிப்பகம் செய்துள்ளேன். இந்த புத்தக கண்காட்சியில் பலரும் வருகை புரிந்து பல்வேறு புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடலாம் வாங்கல் புத்தகத்தையும் நான் தான் வெளியிட்டேன். இந்த முறையும் அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்களின் புத்தகத்தை நான்தான் வெளியிட்டுள்ளேன்.

இந்திய மருத்துவ வரலாற்றில் கலைஞரின் மருத்துவ காப்பீடு திட்டம் வருமுன் காப்போம் என்கின்ற திட்டங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. காலையில் மாறத்தான் என தொடங்கி கட்சிப் பணி, அமைச்சர் பணி என இரவு பகல் பாராமல் அனைத்து இடங்களிலும் சென்று ஆய்வு மேற்கொண்டு தனது பணியை திறம்பட செய்தவர் அமைச்சர் மாசுப்பிரமணியம். குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் கொண்டுவரப்பட்ட நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற திட்டத்தையும் நான் தான் தொடங்கி வைத்தேன்.

கொரோனா உடல் காத்தோம் உயிர் காத்தோம் என்கின்ற புத்தகம் வெறும் புத்தகம் அல்ல, அது ஒரு மிகப்பெரிய ஆவணம் என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் நாம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றோம் என்பதனை மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியம். கொரோனா வந்த இக்கட்டான காலத்தில் அதனை கட்டுப்படுத்த உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மேடையில் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு இந்தியாவிலேயே எளிதாக கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் அந்த நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த காலம் உலகையே உலுக்கிய ஒரு காலம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவ்வாறு இருக்கவில்லை. அரசு கடமையாக முதலமைச்சர் மூன்று கடமைகளை கூறினார். மக்களுக்கு தைரியம் அளிப்பது முதல் கடமை என்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது இரண்டாவது கடமை எனவும் , மூன்றாவது அத்தியாவசிய உதவிகளை அரசு தரப்பில் இருந்து உடனுக்குடியாக செய்ய வேண்டும் என்றும் நமது முதலமைச்சர் கூறி பொதுமக்களின் கஷ்ட காலத்தில் அவர்களின் கஷ்டங்களை போக்க வேண்டும் என கூறினார்.

கொரோனா காலகட்டத்தில் நம்மை பாதுகாக்க ஒரு அமைச்சர் இருக்கிறார், ஒரு அரசு இருக்கிறது என்கின்ற ஒரு உயரிய நம்பிக்கையை மக்களிடையே அளித்தது நமது அரசு. முதலமைச்சரின் திட்டங்களை ஒரு படை தளபதியாக இருந்து அனைத்தையும் செயல்படுத்தியவர் தான் நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியம்.

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளதா? படுக்கையைறை வசதிகள் உள்ளதா? தனிமைப்படுத்திக் கொள்ள அறை வசதி உள்ளதா? என அனைத்தையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டவர் தான் நமது அமைச்சர் மா.சுப்பிரமணியம். ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் தடுப்புச் செலுத்திக் கொள்ள தயாராக இல்லை. அந்த நேரத்தில் தான் நடிகர் கலைமாமணி விவேக் அவர்கள் உயிரிழந்தார். அந்த காலகட்டத்திலும் நமது முதல்வர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டார். எதிர்க்கட்சிகள் பல கேளிக்கை பேச்சுகளும் அந்த நிலையில் பேசினார்கள். ஆனால் எனது தொகுதி மொத்த தொகுதிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் கொரோனா நோய் தடுப்பு ஊசியானதை அதிக அளவில் செலுத்தி கொண்டு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.

எல்லோருடைய கடுமையான உழைப்பு தான் நாம் கொரோனாவை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தி உள்ளோம். கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தை பற்றி அந்த துறைக்கான அமைச்சரை எழுதி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. கொரோனா நோய் தொற்று குறித்து பல புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். இது எழுதவில்லை என்றால் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா வந்த பொழுது இந்தியாவில் மோடி இருந்ததனால் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று பாஜகவினர் கூறுவார்கள்.

புத்தகம் எழுதுவது என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயங்களை பற்றி மட்டும் எழுதுவது அல்ல அவரவர் துறைகளை சார்ந்து இருப்பதை கூட அவர்கள் எழுத வேண்டும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்படிதான் நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தை எழுதினார். தமிழக முதல்வரும் உங்களுள் ஒருவர் என்கின்ற புத்தகத்தையும் எழுதினார். நமது மாணவர்கள் நிறைய புத்தகங்களையும் பாடல்களையும் வாங்கி படிக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களை இடையே வாசிப்புத்திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே கலைஞரின் பேரில் வாசகர்களும் தொடங்கப்பட்டுள்ளது.

நமது முதலமைச்சர் 234 கலைஞர் நூற்றாண்டு நூலகம் தொடங்க வேண்டும் என்கின்ற கட்டளையிட்டார்கள் அதேபோல் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தொடங்கி வைத்து வந்து கொண்டிருக்கிறோம். இனி ஒரு பேரிடர் காலம் வந்தால் அதை எப்படி கையாள வேண்டும் எப்படி அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கு மிக எடுத்துக்காட்டாக இந்த காலகட்டத்தில் நாம் செய்த செயல்கள் உள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த புத்தகங்கள் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

Also Read: துணை முதலமைச்சர் : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!