Tamilnadu

”இரட்டைப் பேரிடரிலிருந்து தமிழ்நாடு மீண்டெழ ஒன்றிய அரசு உதவும்” : முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பெய்த வரலாறு காணாத அதி கனமழை காரணமாக எட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களது வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கியுள்ளது. மேலும் வீடு உள்ளிட்ட பொருளாதா இழப்பிற்கு ஏற்ப நிவாரண நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அதி கனமழை பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் மக்கள் மீள்வதற்கு உடனே நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட இரட்டைப் பேரிடரிலிருந்து மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:-

மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனே, தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்னை அழைத்திருந்தார்.

கடும் நிதி நெருக்கடிக்கிடையே மாநில அரசு மேற்கொண்டு வரும் பெரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவரிடம் விளக்கிக் கூறி, ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியைக் கோரினேன்.

இந்த இரட்டைப் பேரிடரில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் என உறுதியளித்த பிரதமர் அவர்கள், வெள்ளப் பாதிப்பை மதிப்பிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Also Read: “கிறித்தவ மக்களுக்காக திராவிட மாடல் அரசு வெளியிட்ட அறிவிப்புகள்..” : முதலமைச்சர் கிறிஸ்துமஸ் வாழ்த்து!