Tamilnadu

தென் மாவட்டங்களில் கனமழை : மீட்பு மற்றும் நிவாரண பணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகியஆகிய அமைச்சர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியமித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வலிறுத்தினார்.

இதையடுத்து நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளம் ஏற்பட்ட சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீட்கப்பட்ட அங்குள்ள பெல் உயர் நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை நேரில் ஆய்வு செய்தார். மேலும் நெல்லை வண்ணாரப்பேட்டை மணிமூர்த்தி நகர் மக்கள், தச்சநல்லூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதற்கிடையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) புதுதில்லியில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் : நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!