Tamilnadu

”குறைசொல்வதற்கு அதிமுகவிற்கு அருகதையே கிடையாது” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாகப் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கடந்த மாதம் 30ம் தேதியில் தொடர்ந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அன்றைய தினம் மட்டும் 6 மணி நேரத்திற்கு மேல் விடாமல் மழை பெய்தது.

இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றினர். அடுத்த நாள் காலையில் எங்கும் தண்ணீர் தேங்காத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் சிரப்பாக செயல்பட்டது. இதைப்பார்த்து மக்களே திமுக அரசைப் பாராட்டினர்.

இதற்கிடையில் தமிழ்நாட்டிற்குப் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழ்நாடு அரசு புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

இதையடுத்து சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் புயலை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. இப்படி அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் நிலையில் அதிமுகவினர் வேண்டும் என்றே தி.மு.க அரசு மீது குறைச்சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் குறைசொல்வதற்கு அதிமுகவிற்கு அருகதையே கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன், "2015 ஆம் ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டு அ.தி.மு.க அரசு தூங்கிக் கொண்டிருந்தது. இதனால் ஒரே இரவில் சென்னை கடுமையாகப் பாதித்தது. மக்கள் ஒருவேளை உணவுக்கே திண்டாடினார்கள்.

ஒவ்வொரு மழையின் போதும் ரிப்பன் மாளிகையில் தண்ணீர் தேங்கும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. குறை சொல்லும் ஜெயக்குமார் இங்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள். மழைபாதிப்புகள் குறித்துப் பேச ஜெயக்குமாருக்கோ, அ.தி.மு.கவிற்கோ அருகதை இல்லை." என பதிலடி கொடுத்துள்ளார்.

Also Read: BJP- Bribery Janatha Partyயா? : சரமாரியாக கேள்வி எழுப்பும் அமைச்சர் மனோ தங்கராஜ்!