Tamilnadu

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை நாளை திறப்பு : தமிழ்நாட்டுக்கு அவர் செய்தது என்ன ?

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீந்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங். செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்.

பின்னர் சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கினார். தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய அவர், மக்கள் செல்வாக்கு காரணமாக, உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார்.

அதோடு தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரை செய்தது.

நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த பரிந்துரைகளை அமல்படுத்தி சமூக நீதிக் காவலராக உயர்ந்தார் வி.பி.சிங். இவருக்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அந்த திருவுருவச்சிலையை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.

வி.பி.சிங் மண்டல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்தியதோடு, தமிழ்நாட்டுக்கும் வரலாற்றில் நிலைக்கக்கூடிய மிக முக்கியமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

* பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும்போதே "காவிரி நடுவர் மன்றம்" அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார்.

* அவர் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று புலிகளை வைத்து அரசியல் முகவரி தேடியவர்களின் சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே? என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் "யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை" சொன்னார்.

* ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.

* சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.

* அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.

* 1989ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தார்.

* தமிழகத்தின் சமூக நீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூக நீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.

Also Read: பாலஸ்தீன் மீதான தாக்குதல்: இஸ்ரேலில் செல்வாக்கை இழக்கும் ஆளும் வலதுசாரி கட்சி - நெதன்யாகுவுக்கு சிக்கல் !