Tamilnadu

”உண்மை சரிபார்ப்பு குழு ஒரு தணிக்கை அமைப்பு தானே?” : அதிமுகவுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்!

அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளைக் கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இந்த குழு அமைத்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரி அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "இது சம்பந்தமாக ஒன்றிய அரசு ஏற்கனவே 2021 விதிகள் வகுத்துள்ளது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உண்மை சரி பார்ப்பு குழு, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது. உண்மை சரிபார்ப்பு குழு ஒன்றிய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது." என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பொய் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறை தானே? இதில் என்ன தவறு ? காவல்துறைக்கு உதவத்தானே அமைக்கப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "பீகார் தொழிலாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்து சுட்டிக்காட்டினார். குழுவில் தகுதியான நபரை தான் நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து,ஒன்றிய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த வழக்கின் முடிவைத் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

Also Read: With-hold என்றால் என்ன அர்த்தம்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பாடம் எடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு !