Tamilnadu

10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர் : நவ.18ம் தேதி கூடுகிறது சிறப்புச் சட்டமன்ற கூட்டம்!

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அலட்சியமாக நடந்து கொண்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நலத்திட்டங்களும் கிடைக்காமல் போகிறது.

தமிழ்நாட்டில் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார். இதனால் ஆளுநர் நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களில் 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "நவ.18ம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் ஆளுநர் நிராகரித்து அனுப்பிய மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. மீண்டும் மசோதாக்கள் அனுப்பினால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே ஆகவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள்!

1. சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.

2. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா.

3. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.

4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

5. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா.

6. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

7. தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

8. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

9. அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா.

10. தமிழ்நாட்டில் புதிதாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா.

Also Read: பெண்ணினத்தை உயர்த்தும் முதலமைச்சரின் முக்கியமான ஐந்து திட்டங்கள் - பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி !