Tamilnadu

"தமிழ்நாட்டில் 25%க்கு மேல் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது" : அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மஞ்சப்பை விழிப்புணர்வு மின் வாகனங்கள் பிரச்சாரம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மீண்டும் மஞ்சப்பை ஏ.டி.எம் இயந்திரத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்,"உலகம் முழுவதும் பிளாய்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் மஞ்சப்பை என்ற மகத்தான திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இந்த திட்டத்தை அடுத்து மக்கள் பலரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் 25% பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.

பெசன்ட் நகர் கடற்கரை பிளாஸ்டிக் இல்லா கடற்கரையாக மாற்ற வேண்டும் என்பதற்காக, மீண்டும் மஞ்சப்பை கிடைக்கின்ற வகையில் ஒரு வெண்டிங் மெஷின், பிளாஸ்டிக்கை கிரஸ் செய்கின்ற மிஷின் நிறுவி உள்ளோம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீபாவளியில் பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்துகின்ற போது இயற்கையையும் பாதுகாக்கலாம் மற்றும் ஒலி மாசு ஏற்படாமல் தடுக்கவும் முடியும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பசுமை பட்டாசு குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!