Tamilnadu

"தமிழ்நாட்டை திராவிட பூமி என்று சொல்வதில் தவறு இல்லை" : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால், இந்து சமய அறநிலையத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் 32 பேருக்கு, அமைச்சர் சேகர்பாபு பணி ஆணைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, " 2 ஆண்டுகளில் TNPSC மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக இருந்த 240 பணி நியமனங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 539 பேருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பழனி மற்றும் பூம்புகார் கல்லூரிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 300 கோடிக்கான திருப்பணிகள் 40% பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது‌. ரூ. 140 கோடியில் சமயபுரம் கோயில் திருப்பணிகளும், ரூ.90 கோடியில் திருத்தனி கோயில்களுக்கான திருப்பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தவறு நடைபெற தி.மு.க அரசு அனுமதிக்காது. சட்டத்தின் படி அரசு செயல்படும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு புண்ணிய பூமி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திராவிடத்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றது. ஆகவே தமிழ்நாட்டைத் திராவிட பூமி என்று சொல்வது பொருத்தமானதுதான். எதற்கு எடுத்தாலும் குறை கூறும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஆரியம் - திராவிடம் வித்தியாசம் இதுதான்” : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!