Tamilnadu

“மோடி அரசின் கேடு கெட்ட கொடுமைகளையும் அம்பலபடுத்துங்கள்” : திமுக IT விங் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி !

திமுக தகவல் தொழிட்நுட்ப அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை செனாய் நகரில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கழக தகவல் தொழிட்நுட்ப அணி அறிமுக கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகர, மாவட்ட, ஒன்றியத்திற்கு உட்பட்ட தகவல் தொழிட்நுட்ப நிர்வாகிகள் 1200 பேர் கலந்து கொண்டனர்.

இந்த அறிமுக ஆலோசனை கூட்டத்தில் சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள்வது, கழக ஆட்சியின் செயல்பாடுகளை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் கழக தொழிட்நுட்ப நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது

மேலும் இந்த கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கதுறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கழக தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சருமான டி.ஆர் பி ராஜா, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே மோகன், கழக மருத்துவ அணி செயலாளரும்,ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன், கழக தகவல் தொழிட்நுட்ப அணி இணை செயலாளர் ஆர்.மகேந்திரன்,கழக தகவல் தொழிட்நுட்ப அணி ஆலோசகர் கோவி லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சேலத்தில் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணியின் மாநில மாநாட்டிற்கு நிதியாக ரூ 25 லட்சத்தை திமுக தகவல் தொழிட்நுட்ப அணி மாநில செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு :

"அரசியலுக்கு இணையாக அறிவியலிலும் ஆர்வம் காட்டும் இயக்கம் திராவிட இயக்கம். சில கட்சிகள் ஐ.டி விங் என்ற பெயரில் அவதூறுகளை தான் பரப்பி வருகின்றனர். ஆனால் நாட்டிலேயே அறிவார்ந்த ஐ.டி விங்காக திமுக ஐ.டி விங் செயல்படுகிறது. அதற்காக அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

சமூக வலைதளங்களில் மட்டுமன்றி களத்திலும் ஐ.டி விங் நிர்வாகிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். அனைத்து அணியினருடன் ஐ.டி விங் நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும். ஐ.டி விங் நிர்வாகிகள் வேகமாக செயல்பட வேண்டிய காலமாக உள்ளதால் அனைவரும் பொறுப்பு அறிந்து செயல்பட வேண்டும்.

சமூக வலைதளத்தில் கழக அரசை பற்றி அவதூறு பரப்பும் நபர்களையும், கருத்துகளையும் ஆதாரத்துடன் அம்பலபடுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜக மற்றும் அதிமுகவினர் நம் மீதும் கழகத்தின் மீதும் திட்டமிட்டு அவதூறு பாரப்புவார்கள். அதனை நம் ஐ.டி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும்.

9 ஆண்டுகளாக மோடி அரசின் கேடு கெட்ட திட்டங்களையும், மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் அம்பலபடுத்துங்கள். எங்கும் அம்பானி எதிலும் அதானி ,பற்றி எறியும் மணிப்பூர், எல்லாவற்றிலும் ஊழல், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக நடித்து வருகிறார்கள், அவர்களையும் அம்பலபடுத்துங்கள். பாஜக - அதிமுக போன்று அவதூறுகளையும் ஆபாச கருத்துகளையும் பதிவிடாமல், அண்ணாவின் வழியில் கடமை, கண்ணியம், கட்டுபாட்டுடன் செயல்பட்டு மோடி ஆட்சிக்கு GET OUT சொல்வோம்."

Also Read: உலக பட்டினி குறியீடு : “இப்படித்தான் கணக்கெடுப்பு நடத்தப்படுதாம் !” - ஸ்மிருதி இரானி பேச்சால் அதிர்ச்சி !