Tamilnadu

என்.சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் : கோப்பில் கையெழுத்திட ஆளுநர் மறுப்பு - அமைச்சர் பொன்முடி கண்டனம் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான ஆளுமை நிறைந்த தலைவர்களுள் ஒருவர் என்.சங்கரய்யா. இவர் தனது இளம் வயதிலேயே பள்ளி படிப்பை பாதியில் துறந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர், இதற்காக சுமார் 8 ஆண்டுகள் தனது வாழ்வை சிறையில் கழித்தார்.

ஏழை, எளிய மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த இவருக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்' விருது கொடுத்து கெளரவித்தது. தற்போது 100 வயதை கடந்திருக்கும் இவரது ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக கெளரவ முனைவர் பட்டம் வழங்க கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில் சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு :

“1922 ஜூலை 15ல் பிறந்த மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என். சங்கரய்யா அவர்கள், நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி 1ல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வத்தியாயத்தில் கௌரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் என். சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் - வேந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார்.

மேற்காண் நிலையில் 02.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில் (Senate) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்குமாறு ஆளுநர் வேந்தர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.”

Also Read: ”தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதா?” : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வைகோ ஆவேசம்!