Tamilnadu
வெளிமாநிலத்தவரிடம் ரூ.1.40 கோடி மோசடி : பாஜக நிர்வாகி உட்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ் !
இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிந்தர் பால் சிங். இவர் ஹிமாச்சல பிரதேசத்தில் மாநிலத்தில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் இவரது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நிதி உதவி தேவைப்பட்டுள்ளது. இதனால் இவரது நண்பர் ஒருவரை அணுகியுள்ளார். அவர் மூலம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது.
ராஜசேகர் பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவராக இருந்து வருகிறார். இதையடுத்து ஹரிந்தர் பால் சிங், ராஜசேகர் மற்றும் அவரது நண்பர்களை நேரில் சந்தித்து பேசுகையில், பால் சிங்கிடம் ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாக நம்பிக்கை அளித்துள்ளார். ஆனால் அதற்கு ரூ.1.40 கோடியை கமிஷன் தொகையை முன்கூட்டியே கேட்டுள்ளனர். பின்னர் அதன்படி பால் சிங்கும், இவர்கள் கேட்ட பணத்தை ரொக்கமாக கொடுத்துள்ளார்.
ஆனால் சொன்னபடி கடன் பெற்றுக் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர் அந்த கும்பல். இது தொடர்பாக பலமுறை ஹரிந்தர் பால் சிங் பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக ஹரிந்தர் பால் சிங் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர், சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ரஜிதா மெர்னல்சன் (எ) ரேஷ்மின், சென்னை கேகே நகர் சேர்ந்த ராமு, தசரதன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹரிந்தர் பால் சிங்கிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான முத்திரைத்தாள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்தி அவரை ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. மேலும், பால் சிங்கிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தில் 2 சொகுசு கார்களில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்துள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
இதைத்தொடர்ந்து, அவர்களிடமிருந்து கட்டு கட்டாக இருந்த ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம், 2 ஃபார்ச்சூனர் சொகுசு கார்கள், 2 செல்போன்கள், போலியான முத்திரைத்தாள்கள் மற்றும் முத்திரைகள் உள்ளிட்டவையை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!
-
கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.. கோடிகளில் பரிசுத் தொகை.. களமிறங்கும் முன்னணி வீரர்கள்!
-
திமுக தலைவருக்கான பாதுகாப்பு குறைப்பு.. தவெக அரசின் அரசியல் உள்நோக்கமா? : தலைவர்கள் கடும் கண்டனம்!