Tamilnadu
”குடியரசுத் தலைவர் முதல் சாமானிய பெண்கள் வரை பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை" : கனிமொழி MP ஆவேசம்!
தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை யொட்டி, தி.மு.க மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா ,ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், பீகார் அமைச்சர் லெஷி சிங் உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாட்டில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, “தந்தை பெரியார் கண்ட கனவுகளே திமுக ஆட்சியில் திட்டங்களாக மலர்ந்து சாதனைகளை படைத்தது. கலைஞர் ஆட்சியின் நீட்சியாக தளபதியின் ஆட்சி பெண்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அத்தகைய ஒளியை உருவாக்க முடியும் என்று சொன்னவர் தலைவர் கலைஞர். 11 பெண் மேயர்கள் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.
இன்னும் 50 ஆண்டுகளானாலும் அமலுக்கு வராத வகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. குடியரசுத் தலைவர் தலித் சமூக பெண் என்பதால் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் இந்தியாவின் முதல் குடிமகள் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் ஒரு தலித் பெண் அமைச்சராக நீடிக்க முடியாத நிலை உள்ளது. குடியரசுத் தலைவர் தொடங்கி சாமானிய பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழலை பாஜக ஆட்சி உருவாக்கியிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!