Tamilnadu

ரெடியா மக்களே.. அரசு பேருந்தில் இன்று முதல் தீபாவளிக்கு முன்பதிவு தொடக்கம்.. முழு விவரம்!

ஆண்டுதோறும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் இந்த பண்டிகை தினங்களில் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகள், 2-3 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு தொடங்கப்படும். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரயிலில் முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களிலே நிறைவடைந்தது.

அந்த வகையில் இன்று அரசு பேருந்துகளில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்ப 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் பெரும்பாலானோர் நவ.10 (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுவர். அவ்வாறு பயணம் மேற்கொள்வோர் இன்று முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், நவ.11 (சனிக்கிழமை) பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (அக்.12) தொடங்கவுள்ளது. நவ.9 (வியாழக்கிழமை) பயணிக்க விரும்புவோருக்கான முன்பதிவு நேற்றே தொடங்கியது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுடன் கூட்டம் நடத்தி போக்குவரத்துத் துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நாக் அவுட் போட்டியில் இந்தியா தோற்க இந்த வெறிதான் காரணம்- KL ராகுலை குறிப்பிட்டு விமர்சித்த கம்பீர்!