Tamilnadu

காவிரி விவகாரம் : முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் !

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ப.சபாநாயகம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பின்னர் வினாக்கள் - விடைகள் நேரம் தொடங்கியது. அப்போது எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். சபாநாயகர் அப்பாவு முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் உள்ள அனைத்து கட்சியும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து “தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி”, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Also Read: “தெர்மாகோல் போட்டு மூடிவச்சிருக்கோம்..” - தனது பாணியில் செல்லூர் ராஜூக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் !