Tamilnadu

கோவிலுக்குள் அனுமதிக்காமல் ஹெச்.ராஜாவை விரட்டியடித்த பா.ஜ.கவினர்.. பிறந்தநாள் அன்று நேர்ந்த சோகம் !

பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளரும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜா அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார். மறைந்த தலைவர்கள் குறித்தும், நீதிமன்றத்தை குறித்தும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்டு வழக்கில் இருந்து தப்பிப்பதையும் அவர் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்று சக பாஜக கட்சியினராலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மந்திர விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைக்கு பாஜகவைச் சேர்ந்த பாலரவிராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக ஹெச்.ராஜா அந்த கோவிலுக்கு இன்று இரவு வருகை தந்தார்.

ஆனால் இந்த நிகழ்ச்சி குறித்து திருப்புவனம் பாஜக ஒன்றிய தலைவர் மோடி பிரபாகரனிடம் எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை என்றும், நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோடி பிரபாகரன்சம்பவ இடத்துக்கு வந்து ஹெச்.ராஜாவை சாமி கும்பிட விடாமல் தடுத்து காரை மறித்துள்ளார்.

போலீசார் சமாதானம் சொல்லியும் . சாமி கும்பிட விடாமல் ஹெச்.ராஜாவை தடுத்துள்ளார். மேலும் இது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஹெச்.ராஜா முன்னிலையிலேயே மோடிபிரபாகரனும், பாலரவிராஜனும் ஒருவருக்கு ஒருவர் அடிக்க பாய்ந்தனர். இதனால் காரில் ஏறி ஹெச்.ராஜா திநிர்வாகிகளை திட்டியவாறு ஹெச்.ராஜா அங்கிருந்து பதில் எதுவும் சொல்லாமல் சென்றார் .இந்த சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.