Tamilnadu

வீட்டிலேயே பிரசவம் : வாளியில் கயிறு கட்டி வைக்கப்பட்ட பிறந்த குழந்தை.. தாயும் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வசந்தி (38) - செந்தில் (48) தம்பதி. கட்டிடத் தொழிலாளியான இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தை, 2 ஆண் குழந்தை என மொத்தம் 5 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த சூழலில் வசந்தி 6-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். எனவே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வசந்திக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்ட்டுள்ளது.

அப்போது அவருக்கு குழந்தை பிறந்ததையடுத்து இரத்த போக்கு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த வசந்தியின் கணவர் செந்தில் மற்றும் குடும்பத்தினர், உயிரிழந்த வசந்தியின் உடலை யாருக்கும் சொல்லாமல் எடுத்து சென்றுள்ளனர்.

இதனால் மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நேரடியாக செந்தில் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே பார்க்கையில், வசந்திக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில், கயிறு சுற்றி வாளியில் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டதும் அதிர்ந்த போலீசார் குழந்தை மற்றும் வசந்தி ஆகியோரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வசந்தியின் கணவர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குழந்தை இறப்புக்கான காரணம் உடற்கூறாய்வு முடிவுக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 23-ம் தேதி கூட தருமபுரி அருகே youtube பார்த்து கணவன் பிரசவம் பார்த்ததில் மனைவி உயிரிழந்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ஆபத்தான காரியத்தை செய்யவேண்டாம் என்றும், பிரசவம் சார்ந்த விஷயங்களை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read: Telegram-ல் ஆசை வலை விரித்த மர்ம கும்பல்: ஆன்லைனில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி.. 2 பேர் கைது !