Tamilnadu

“நான் கலைஞரின் பேரன்; மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.. எதற்கும் அஞ்ச மாட்டேன்” : அமைச்சர் உதயநிதி பதிலடி!

தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிசம்பர் மாதத்தில் இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கு கழக மூத்த முன்னோடிகளான உங்களுடைய வாழ்த்துக்களை பெறுவதற்காக வந்துள்ளேன். வீரம் செறிந்த மாவட்டம், பல அடக்குமுறைகளை கண்ட மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம்.

மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, இப்படி பல்வேறு திட்டங்களை வெகு சிறப்பாக இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று வழங்க உள்ளார்கள் நமது தலைவர்.

கடந்த ஆட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எப்படி கொண்டாடினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், நாம் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடுகிறோம் என்பதை அனைவரும் அறிவர்.

இரண்டு நாட்களாக நீங்கள் கேள்விப்பட்டு கொண்டிருப்பது சனாதனம் என்ற வார்த்தையை தான். அந்த நிகழ்ச்சியே சனாதனம் எதிர்ப்பு மாநாடு தான். அங்கு போய் நான் சனாதனத்தை வாழ்த்த வா முடியும் . சிலருக்கு வயிற்று எரிச்சலில் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் என்னை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் என் தலைக்கு பத்து கோடி ரூபாய் விலை பேசி உள்ளார். எதற்கு பத்து கோடி. நானே தலையை சீவி விடுவேன். பேரறிஞர் அண்ணா, பெரியார் சமூகநீதி காப்பதற்காகவே திமுகவை தொடங்கினார்கள்.

அந்தக் காலத்தில் பெண்கள் வெளியே வர முடியாது, தொட்டால் தீட்டு என இருந்ததை பெரியார் ஒழித்து கட்டினார். என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள் நான் கலைஞரின் பேரன் நான் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன் என்றார். எல்லா மாநிலத்திலும் என் மீது வழக்குகள் கொடுத்து வருகின்றனர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்றார்.

Also Read: “சனாதனம் பற்றி அவர்களே இப்படிதான் சொல்கிறார்கள்..” : பா.ஜ.க கும்பலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!