Tamilnadu

கொடநாடு வழக்கு.. வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமி: கனகராஜ் சகோதரர் தனபால் பரபரப்பு தகவல்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீஷன், உதயகுமார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலிஸார் விசாரித்த போது, சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இந்த கொலை கொள்ளை சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் மர்ம வாகன மோதியதில் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலிஸார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் வாகன விபத்தில் மரணமடைந்தது குறித்து வழக்கு பதிவு செய்து சேலம், சென்னை, கோவை, நீலகிரி போன்ற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடநாடு பங்களாவிலிருந்து எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் ஆவணங்களை எடுத்து வந்ததாக கார் ஓட்டுநர் கனகராஜ் சொன்னதாக அவரது சகோதர் தனபால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தனபால், "கொடநாடு பங்களாவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி கூறிதான் ஆவணங்களை எடுத்துவந்ததாக கனகராஜ் தன்னிடம் கூறினார். மேலும் ஆவணங்கள் அடங்கிய பையையும் என்னிடம் காட்டினார். இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் சொன்னார். தனது சகோதரர் விபத்தில் இறக்கவில்லை. திட்டமிட்டு கொலை செய்து விபத்தாக ஜோடித்து விட்டனர்.

கனகராஜின் செல்போனை எடப்பாடி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுரேஷ்குமார் என்பவர் தான்  எடுத்துச்சென்று அதிலிருந்த தகவல்களை அழித்துள்ளார். அதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எதுவும் சொல்லக்கூடாது என்று  என்னை மிரட்டினார். காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியாக இருந்தவர்.

இதனால் சி.பி.சி.ஐடி விசாரணையில், உயிர் மீது பயம் இருந்தால் எதையும் வெளியே சொல்லவில்லை.  தற்போது தமிழ்நாடு அரசு மீதுள்ள நம்பிக்கையால் உண்மைகளை வெளியே சொல்கிறேன்.  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”நீட் விலக்கு பெறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!