Tamilnadu

ஓமன் To சென்னை.. பறக்கும் விமானத்தில் மது அருந்திய வாலிபர்.. விமானம் தரையிறங்கியதும் நடந்த ட்விஸ்ட் !

பொதுவாக விமானங்களில் பயணம் செய்பவர்கள் எந்த வித தொந்தரவும் இன்றி பயணம் செய்ய விரும்புவர். அதோடு அவர்கள் நிம்மதியாகவும் பயணம் செய்ய எண்ணுவர். ஆனால் சில நேரங்களில் பறக்கும் விமானங்களில் நடைபெறும் நிகழ்வுகள் பயணிகளை முகம் சுழிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் பறக்கும் விமானத்தில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர், உள்நாட்டவர் என சுமார் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அதில் செங்கல்பட்டு, கல்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்ற நபரும் பயணித்தார். அது சர்வதேச விமானம் என்பதால் குடிக்க மது கொடுக்கப்படும்.

எனவே அங்கே கொடுக்கப்பட்ட மதுவை வாங்கி சுரேந்தர் அருந்தியுள்ளார். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் தன்னிலை மறந்துள்ளார். இதனால் பயணிகளிடம் வம்பிழுத்துள்ளார். இவரது செயல் அங்கிருக்கும் பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தியதும் இதுகுறித்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களும் சுரேந்தரை வேறு இடத்திற்கு மாற்றி அமர வைத்தனர்.

ஆனாலும் அவர் தொடர்ந்து ஆபாச வாரத்தை பேசி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதையடுத்து ஊழியர்கள் வேறு வழியின்றி தலைமை விமானியிடம் தெரிவித்தனர். பின்னர் அவர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு சம்பவத்தை கூறினார். இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் குடித்து ரகளையில் ஈடுபட்ட சுரேந்தரை போலீஸ் அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறக்கும் விமானத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிர்ச்சி வீடியோ.. இளம் பெண்ணை கடித்து ஆற்றுக்கு இழுத்துச் சென்ற முதலை: உறைந்து நின்ற மக்கள்!