Tamilnadu

“நீட் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக மூச்சுவிடவே அதிமுக பயப்படுகிறது”: எடப்பாடியை சாடிய அமைச்சர் உதயநிதி!

சென்னையில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேஸிங் எனப்படும் கார் பந்தயம் போட்டிக்கான ஓடுதளத்தை (Formula Racing Circuit) அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து நடத்தும் இந்த ஃபார்முலா 4 போட்டியானது வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைகிறது. போட்டிக்கான ஓடுதளம் குறித்த வரைபடம் உள்ளிட்ட விவரங்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி விளக்கினார்.

இறுதியாக போட்டிக்கான இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் Racing Promotions Private Limited இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுகவின் கூட்டணி கட்சி தான் பாஜக. அந்த ஒன்றிய பாஜக அரசின் பிரதிநிதியாக தான் ஆளுநர் உள்ளார். அவர் ஒரு பெற்றோரிடம் நீட் தேர்வு விலக்குக்கு கையெழுத்து போடமாட்டேன் என தைரியமாக சொல்கிறார்.

அதனை எதிர்த்து ஒரு கண்டனமாவது அதிமுகவினரால் சொல்ல முடிகிறதா? ஆளுநரை எதிர்த்தோ, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்தோ மூச்சு விடக்கூட முடிகிறதா? ஆனால் நாங்கள் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். சட்டப்போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து எதிர்ப்போம். தி.மு.க என்றைக்குமே மாணவர்களின் பக்கம் தான் நிற்கும்" என்றார்.

மேலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு குறித்த கேள்விக்கு, "அதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்றும் நடைபெற்றது. மீண்டும் நடத்த உள்ளோம். முதலில் 7 பேருக்கு வேலை வழங்க முன்னுரிமை அளிக்க உள்ளோம். மேலும் தொடர்ந்து தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு வேலைகள் வழங்கப்படும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து,”பயிற்சிக்காக சென்னை வந்துள்ள மணிப்பூர் வீரர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியை நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சியை தொடங்கி உள்ளனர். 15 வீரர்கள், இரண்டு பயிற்சியாளர்கள் வந்துள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் அவர்களை சந்திக்க உள்ளேன்" என்றார்.

Also Read: டிச.09,10 - சென்னையில் ஃபார்முலா ரேஸிங் போட்டி.. Street ஓடுதளத்தை அறிமுகம் செய்த அமைச்சர் உதயநிதி !