Tamilnadu

நாங்குநேரி சம்பவம் : உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல், நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் சின்னதுரை என்ற மாணவரை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 6 பேர் கொண்ட மாணவ கும்பல் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அதனை தடுக்கமுயன்ற சின்னத்துரையின் தங்கை சந்திராவையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், சாதிய பாகுபாடு காரணமாக சின்னதுரையுடன் படிக்கும் சக மாணவர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அந்த மாணவரின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து, "சட்டம் தன் கடமையை செய்யும்" என்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவரை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் காணொளி வாயிலாக நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்து உறுதுணையாக இருப்பதாக சிறுவனின் குடும்பத்தாரிடம் பேசினார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தால், மாணவன் சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் (59) என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வெளியான செய்தி குறிப்பு பின் வருமாறு : -

"திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன், த/பெ.சுடலைமுத்து (வயது 59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாங்குநேரி சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாங்குநேரி சம்பவத்தில் சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !