Tamilnadu

கொடநாடு வழக்கு.. குற்றவாளிகள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் தப்ப முடியாது: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

கொடநாடு வழக்கில் யார் யார் எல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் சட்டத்தின் முன் கட்டாயம் நிறுத்தப்படுவார்கள். எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறுவார்கள்.

செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு எந்த சலுகையும் அவருக்கு வழங்கப்படவில்லை. வழங்கவும் முடியாது. செந்தில் பாலாஜியின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அவருக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் லஞ்ச ஒழிப்பு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நபர்களிடம் ஒப்படைக்க முடியாது.

கொடநாடு வழக்குக்காக போராட்டம் நடத்துபவர்கள் போராட்டம் நடத்தட்டும். ஆனால் உண்மையான குற்றவாளிகளை அரசு விசாரணை செய்து மறு விசாரணைக்காகக் கேட்டுள்ளோம். யார் யார் எல்லாம் தவறு செய்தார்களோ சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படுவார்கள். எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மணிப்பூர் சம்பவம் மிருகத்தனமானது - பயங்கரமானது” : ஒன்றிய அரசுக்கு அமெரிக்கா கண்டனம்!