Tamilnadu

அன்று ரூ.1.. இன்று ரூ.10.. கூடுதலாக வசூலித்த சூப்பர் மார்க்கெட்.. ரூ.30,010 அபராதம் விதித்த நீதிமன்றம் !

பொதுவாக சில கடைகள், சூப்பர் மார்க்கெட் என ஒரு சில இடங்களில் பொருட்களுக்கு MRP-க்கும் அதிகமாக வசூலித்து வருகின்றனர். சிலர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடும் சூழலில், சிலர் இதனை தட்டி கேட்டு தங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போதும் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் அழகு நாச்சியபுரத்தை சேர்ந்தவர் துரைபாண்டி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு சென்னைக்கு வந்துள்ளார். அப்போது சென்னையில் இருக்கும் தி.நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் (More Supermarket) ஒன்றில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது Hair Dye ஷாம்புவும் வாங்கியுள்ளார்.

அப்படி ஷாம்பு வாங்கும்போது ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.29-க்கு ரூ.39 என்று அந்த சூப்பர் மார்க்கெட் வசூலித்தது. இதனால் துரைபாண்டியும் அங்கிருக்கும் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து அங்கிருக்கும் மேலாளரிடமும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு உரிய விளக்கமும், காரணமும் தெரிவிக்கவில்லை.

இப்படி ஒரு நபரிடம் நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால், அநேக மக்களிடம் இது போல் எவ்வளவு வசூலித்திருப்பார்கள். இதனால் விரக்தியடைந்த துரைபாண்டி சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிமன்றம், வாடிக்கையாளர் சேவை குறைபாட்டிற்காக அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.25,000 இழப்பீடாகவும், சட்ட வழக்கு செலவுகளுக்கு ரூ.5,000-மும், ஷாம்புவுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10 ஆகியவற்றையும் சேர்ந்து ரூ.30,010 தொகையை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் இரண்டு மாதத்துக்குள் அந்த தொகையை வழங்காத பட்சத்தில் 9 சதவீத கூடுதல் வட்டி தொகையாக சேர்த்து துரைபாண்டிக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

திருவள்ளூரில் தனியார் துணிக்கடை ஒன்றில் செருப்பு விலையை ரூ.1 கூடுதலாக விற்றதால் வழக்கறிஞர் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதால் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாலையில் இருந்தவரை காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்த பாஜக பிரமுகர்: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!