Tamilnadu

மின் கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தி.. விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்த மின்வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்த கோரி கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்தது.

அதன்படி வீடுகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் ரூ.2.25...400 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு ரூ.4.60 வீதம் கணக்கிட்டு வாங்குகிறார்கள். 401-500 யூனிட் வரை ரூ.6ம், 501-600 யூனிட் வரை ரூ.8ம், 601-800 யூனிட் வரை ரூ.9ம், 801-1000 யூனிட் வரை ரூ.10ம் 1001 யூனிட் மேல் 1 யூனிட் ரூ.11 என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2022ம் ஆண்டு செப்.9ம் தேதி, 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கிய நிலையில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்திருந்தது.

அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதிமுதல் அமலுக்கு வரும் வகையில் கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம், இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு நடப்பாண்டு ஜூலை மாதத்தில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது; வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்; வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின்கட்டணம் உயரும் என அறிவித்தது.

அதன்படி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ம் தேதி உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விவசாய இணைப்புகள் என மொத்தம் 2.67 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில் வீட்டு மின் இணைப்புகள் 2.42 கோடி மட்டுமே. தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆண்டுக்கு 3600 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தினால் வீட்டு மின் இணைப்புகளுக்கு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படுவது போல வர்த்தக கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் பரவுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2.42 கோடி வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு மேல் வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தினால் அங்கு வர்த்தக பிரிவின் படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகிறது. அது தவறான தகவல் ஆகும்.

மேலும் தமிழகத்தில் 9 லட்சத்து 92ஆயிரத்து 601 பேர் மட்டுமே 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இது மொத்த வீட்டு இணைப்புகளில் 4.08%, இவர்களில் பெரும்பாலானவர்கள் அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். மற்ற 96 சதவீத பேர் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்துகின்றனர். எனவே சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மை இல்லை என தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் விளக்கம் அளித்துள்ளனர்.

Also Read: “தமிழ் மொழியை அறிவிக்க விடாமல் ஏதேனும் சக்தி தடுக்கிறதா?” - பிரதமர் மோடிக்கு கேள்வியெழுப்பிய திமுக MP!