Tamilnadu

2 நாளில் 2-வது சம்பவம்: கழுத்தை இறுக்கிய கடன் தொல்லை.. தம்பதி எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிடலப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48). திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோ மொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்த தம்பதிக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகனும் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர. இந்த சூழலில் பொன்னுதாஸின் ஆட்டோ மொபலைஸ் நிறுவனம் நஷ்டத்தில் சென்றுள்ளது. இந்த ஆட்டோ மொபலைஸ் நிறுவனத்தை நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தொடர்ந்து ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் பணத்தை அளித்தவர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னுதாஸ், தனது மனைவியிடம் கூறி புலம்பியுள்ளார். இதனால் வேறு வழியின்றி நேற்று இருவரும் தங்கள் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தனி தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மகன் மற்றும் மகள் பெற்றோர் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சிடலப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்கள் முன்னர் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த கருத்தோவியன் (55) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா (50) ஆகியோர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி 2 நாட்களில் 2 தம்பதி கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: Online மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நைஜீரியரை கைது செய்த சென்னை போலிஸ்!