Tamilnadu

ரூ.127 கோடி ஊழல்.. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: விரைவில் ஆர்.காமராஜ் கைது?

அ.தி.மு.க ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து 2022ம் ஆண்டு திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து 51 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனையில் ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது கூட்டாளிகள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் உடந்தையுடன் தஞ்சாவூரில் NARC Hotel Privar Limited என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்து வாங்கியது தெரியவந்தது.

அதோடு அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்கள் இனியன் மற்றும் இன்பன் ஆகியோர் பெயரில் தஞ்சாவூரில் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் (ஸ்ரீவாசுதேவபெருமாள் ஹெல்த் கேர் லிமிடெட்) என்ற பெயரில் நவீன பன்னோக்கு மருத்துவமனையைக் கட்டியதும் தெரியவந்து. இப்படி வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக ரூ.127,49,09,058 கோடிக்குச் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புலன் விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டப்பேரவை தலைவரிடம் இசைவானைப் பெறப்பட்டது. இதன்படி இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன், கூட்டாளிகள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகிய 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Also Read: ”பிரச்சனை உருவாக்குவதே ஆளுநரின் முழுநேர வேலையாக இருக்கு”.. தொல். திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு!