Tamilnadu

திருமணமான தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த அண்ணாமலை.. பாஜகவினரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அந்த கட்சியில் இருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்தே காணப்படுகிறது. எந்த அளவு குற்றங்கள் செய்கின்றனரோ, அதே போல் காமெடியும் செய்து வருகின்றனர். தங்கள் சுய விளம்பரத்துக்காக அவர்கள் செய்யும் செயல் கேளிக்கையாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போதும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஏற்கனவே திருமணமான ஒரு ஜோடிக்கு அண்ணாமலை தாலி எடுத்துக்கொடுத்து மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாஜகவினரை கிண்டலடித்து வருகின்றனர்.

அதாவது தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை தனது 39-வது பிறந்தநாளை கடந்த ஜூன் மாதம் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் பலவற்றை செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில் நேற்றைய முன்தினம் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி ஹரிகிருஷ்ணன் பா.ஜ.க-வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராக இருந்து வருகிறார். எனவே ஹரிகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அண்ணாமலை தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அவர் கையாலே தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடந்தினார்.

இந்த திருமண செலவு மொத்தத்தையும் பாஜகவினரே ஏற்றுக்கொண்டு நடத்திய நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஜோடிகள் ஏற்கனவே திருமணமானவர்கள் என்று சில செய்திகள் வெளியானது. மேலும் திருணம் ஏற்பாடு செய்யப்பட்ட பின் ஜோடிகளை தேடி பாஜகவினர் அழைத்ததாகவும், யாரும் கிடைக்கவில்லை என்று திருமணம் செய்தவர்களுக்கே மறுபடியும் திருமண செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்த ஜோடிக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தம்பதியினருக்கு குழந்தை உள்ளதாகவும், அந்த குழந்தைக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

அதாவது திண்டிவனத்தை அடுத்துள்ள கிடங்கல் 2 என்ற பகுதியை சேர்ந்த ராஜா (எ) கிறிஸ்டோபர், எபினேசர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் ஆகியோருக்கு ஏற்கனவே திருமணமானதும், இதில் சகோதரர்களான கிறிஸ்டோபருக்கு 1 குழந்தையும், எபினேசருக்கு 2 குழந்தைகளும் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஏற்கனவே திருமணமான இவர்கள் மீண்டும் தங்கள் மனைவிகளுடன் நேற்றைய முன்தினம் பாஜகவினர் நடத்திய திருமண நிகழ்வில் அண்ணாமலை தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்துகொண்டனர். இதில் கிறிஸ்டோபர் குழந்தைக்கு தான் நேற்று பிறந்தநாள் விழா தனியார் மண்டபம் ஒன்றில் நடந்துள்ளது.

இந்த உண்மை சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், பாஜவினரை பொதுமக்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஆட்கள் கிடைக்காமல் ஏற்கனவே திருமணமாவர்களையே, அதுவும் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ள பாஜகவினரின் செயல் அனைவர் மத்தியிலும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

Also Read: சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு.. ராகுல் காந்தி மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்!