2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது "மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லோரும் திருடர்களாக இருக்கிறார்கள்" என கூறியிருந்தார்.
இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்ததாகக் கூறி பா.ஜ.க நிர்வாகி புர்னேஷ் மோடி வாழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் சூரத் நீதிமன்றத்தை எதிர்த்து குஜராத் உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்து விட்டது.
ராகுல் காந்திக்கு எதிராக 10 அவதூறு புகார்கள் நிலுவையில் இருப்பதால் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவில் எந்தத் தலையீடும் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு மட்டுமல்லாமல் ராகுல் காந்தி மீது சாவர்க்கரின் பேரன் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, எந்த வகையிலும் அநீதியை ஏற்படுத்தாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான உறுதியை இருமடங்கு அதிகரிக்க செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, "குஜராத் மண்ணில் நீதி கிடைக்காது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என தெரிவித்துள்ளார். இப்படி பலரும் ராகுல் காந்தியின் மனு தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.