Tamilnadu

நிலம் வாங்கி தருவதாகக் கூறி ரூ. 51 லட்சம் பண மோசடி.. விருதுநகர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகி கைது!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் சத்யராஜ் . இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு செயலாளராகப் பொறுப்பில் உள்ளார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை திருத்தங்கல்லில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வரும் ஈஸ்வரன் என்பவருக்குக் கிரயம் முடித்து பத்திரப்பதிவு செய்து தருவதாகக் கூறி அவரிடம் கடந்த ஜூன் மாதம் முதல் தவணையாக ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் தவணையாக ரூ. 41 லட்சம் பணமாகப் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி சொன்ன நேரத்தில் நிலத்தை வாங்கி தராமல், பத்திரப்பதிவு செய்யாமல், காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இதனால் கொடுத்த பணத்தை ஈஸ்வரன் கேட்டுள்ளார். இதற்கு சத்யராஜ் பணத்தைக் கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் இது குறித்து ஈஸ்வரன் திருத்தங்கல் காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி சத்யராஜ் மீது புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் பா.ஜ.க நிர்வாகி சத்யராஜை கைது செய்தனர். சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அமலநாத கமலக்கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தி15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் விருதுநகர் மாவட்ட சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

Also Read: “ஹர் ஹர் மகாதேவ்” எனக் கூறி தலைமையாசிரியரை விரட்டி தாக்கிய இந்துத்துவ கும்பல்.. மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி