Tamilnadu

ரயில் பயணிகளே உஷார்.. 10 ஆண்டாக லேப்டாப்டை திருடி வந்த பிரபல திருடன் அதிரடி கைது.. சிக்கியது எப்படி ?

சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சுப்பையா சுரேஷ் (வயது-25). இவர் குடும்பத்துடன் மதுரை சென்று விட்டு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையில் இருந்து தாம்பரம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் தாம்பரத்தில் இறங்குவதற்கு முன்பாக அவரது உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்க முற்பட்டபோது அவர் வைத்திருந்த லேப்டாப் பேக் காணவில்லை அந்த பேக்கில் 19 சவரன் தங்க நகையும் இருந்துள்ளது.

உடனடியாக இதுகுறித்து தாம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் காணாமல் போன பேக்கினை முதுகில் மாட்டியவாறு வேகமாக நடந்து செல்லும் காட்சி சி.சி.டிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சிகளை வைத்து தாம்பரம், திரிசூலம் ,எழும்பூர் ஆகிய ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் தொடர்ந்து ஆய்வு செய்து பார்த்தபோது அனைத்து கேமராக்களின் முகம் தெரியாத அளவிற்கு குற்றவாளியின் பின்பக்கம் மட்டுமே பதிவாகி இருந்தால் குற்றவாளியை பிடிப்பதற்கு போலீசாருக்கு மிகவும் சிக்கல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து குற்றவாளியின் அங்க அடையாளங்களை கொண்டு தமிழ்நாடு ஆந்திரா போன்ற ரயில்வே நிலைய காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் நாளுக்கு நாள் விரைவு ரயில் லேப்டாப் திருட்டுகள் அதிகரித்ததாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்ததால் உடனே தாம்பரம் ரயில்வே ஆய்வாளர் வைரவன் தலைமையில் எட்டு பேர் கொண்ட தனிப்படை அமைத்து கடந்த இரண்டு மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ரயில் நிலையத்தில் உள்ள 28 சி.சி.டிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த போது ஆந்திரா ரயில் நிலையத்தில் குற்றவாளியின் புகைப்படம் தெளிவாக போலீசாருக்கு கிடைத்தது. புகைப்படத்தை வைத்து விசாரித்ததில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல லேப்டாப் திருடன் ஜெகதீசன் (வயது-38) என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் போலீசார் கொளத்தூர் பகுதியில் உள்ள ஜெகதீசன் வீட்டுக்கு சென்று அசந்து தூங்கிக் கொண்டிருந்த ஜெகதீசனை சுற்றி வளைத்து கைது செய்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் பாணியில் விசாரித்தனர்.

அப்போது விரைவு ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பயணிகள் ஆழ்ந்து தூங்கும் போது அவர்களிடம் இருக்கும் லேப்டாப்பை பேக்குடன் திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், இவர் கடந்த 10 வருடங்களாக லேப்டாப் திருட்டையே தொழிலாக செய்து வருவதாகவும், இவர் மீது ஆந்திரா காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளும் எழும்பூர் மற்றும் தாம்பரம் காவல் நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இதுவரையில் பத்து முறை சிறைக்கு சென்று வெளியே வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலிஸார் கைது செய்தனர்.

Also Read: கர்நாடகா : பாஜக முன்னாள் முதல்வர் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை.. அதிரடி காட்டும் காங்கிரஸ் அரசு !