Tamilnadu

தொழிலதிபரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி.. பாஜக மாவட்ட நிர்வாகிக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி !

பாஜகவினர் செய்யும் அராஜகங்கள் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பாலியல் குற்றங்கள், மோசடிகளில் முதன்மையாக இருப்பது பாஜகவை சேர்ந்தவர்கள் என்று சொன்னாலும் தவறில்லை. அவதூறு கருத்து பரப்புவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே என்பது போல் தவறான போலி செய்திகளை நாளுக்கு நாள் பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் பாஜகவின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. மேலும் தாங்கள் பாஜகவில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பதாக கூறி பல்வேறு முறைகேடுகளிலும், பண மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தொழிலதிபரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணமூர்த்தி என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 7 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட நாராயணமூர்த்தி பாஜக நிர்வாகி கருணாகரன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் விரைவு நீதிமன்ற நடுவர் செல்வரசி, குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி கருணாகரன் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு பணத்தை தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.