Tamilnadu

கிட்னி பிரச்னையால் உயிரிழந்த கணவர்.. 3-வது நாளே 3 பிள்ளைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவால் சோகம் !

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஈஸ்வரன் என்ற விவசாய தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஈஸ்வரனுக்கும் பாண்டீஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி வைத்தீஸ்வரி (15), காளீஸ்வரி (11) என்ற 2 மகள்கள் உள்ளனர். மேலும் விக்னேஸ்வரன் என்ற 3 வயது மகனும் உள்ளார்.

இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கணவர் ஈஸ்வரனுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. என்ன என்று மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, அவருக்கு கிட்னி பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ந்த குடும்பம் தொடர்ந்து அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தது.

மேலும் ஈஸ்வரனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குடும்பத்தை மீளா துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் மனைவி பாண்டீஸ்வரியும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் 2 பெண் பிள்ளைகளை வைத்து என்ன செய்வது என்று யோசித்த அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியுள்ளார்.

ஆனால் பிள்ளைகளை நினைத்த அவர், அவர்கள் உயிர்களையும் பறிக்க எண்ணியுள்ளார். அதன்படி நேற்று பாண்டீஸ்வரி தங்களுக்கு சொந்தமான கிணற்றுக்கு தனது 2 மகள்கள், 3 வயது மகனையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கே பிள்ளைகளை முதலில் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தொடர்ந்து தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனே காவல்துறை, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வந்து கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 4 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சடலங்களை மீட்ட அதிகாரிகள் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்த சோகத்தில் பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் செயல் விருதுநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: சாதி காரணமாக காதல் ஜோடியை சுட்டுக்கொலை செய்த பெண்ணின் தந்தை.. சடலத்தை முதலைகளுக்கு உணவாக்கிய கொடூரம் !