கரூர் மாவட்டத்தில் ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்த கும்பலை பிடிக்க விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கரூர் தாந்தோன்றிமலை ஊரணி மேட்டு பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யப்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பெண் காவலர்கள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட நிர்வாகி ரகுபதி என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததை உறுதி செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகி ரகுபதியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து பாஜக நிர்வாகியை சிறையில் அடைத்த போலீசார், அந்த வீட்டிலிருந்து அவருக்கு உதவியாக இருந்த பெண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.